Tuesday, September 10, 2013

வந்தாச்சூ !!! ....

விடுபட்ட இடங்களை நிரப்பிக்கொண்டு வந்திட்டேங்க!!

Glue இல்லாமல் மைதா பசை போட்டு ஒட்டியதால, அது காயாம இருந்ததால, கூடவே விநாயகரைக் கவனிக்க வேண்டி வ‌ந்ததால வர தாமதமாகிடுச்சு, ஸாரி, ஸாரி.


ஒரு சமயம் சுந்தர் ஒரு கம்பெனியில்  சேர்ந்த‌ முதல் நாள், மாலை வீட்டுக்கு வந்ததும் ஆஃபீஸ் கம்ப்யூட்டர், வேலை சம்பந்தமான முக்கிய பேப்பர்களை எல்லாம் உள்ளே வைத்துவிட்டு, ஒருசிலவற்றை எடுத்துவந்து டேபிளின்மீது வைத்துவிட்டு சென்றார்.

அதிலிருந்த இந்த emoticons அட்டை என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவ்வளவுதான், அதிலிருந்து பாதியை பிய்த்தெடுத்துக்கொண்டு அங்கிருந்து நான் எஸ்கேப்.

இவர் வந்து அட்டையைப் பார்த்துவிட்டு "ஸ்டிக்கர்ல பாதியைக் காணோம், Bag லதான் கொட்டியிருக்கணும், என்று சொல்லிக்கொண்டே சாப்பிட வந்தார்.

என்னைப் பார்த்ததும் இவருக்கு சிரிப்பு. "பாப்பா செய்ற வேலைய எல்லாம் நீ செஞ்சுட்டிருக்க" என்றார்.

ஆமாங்க, emoticons  ல அவர் காணோம்னு சொன்ன ஸ்டிக்கரை எல்லாம் ஃப்ரிட்ஜில் ஒட்டிக்கொண்டிருந்தேன். நான் செய்யும் சில வேலைகளை இன்னமும் அவரால் நம்ப முடியாது & புரிந்துகொள்ளவும் முடியாது.


திரும்பிப்பார்த்து படத்துல இருக்கற மாதிரிதான் சிரித்துவைத்தேன்.

இந்த வேலை எனக்கு ரொம்ப பிடிக்கும். மகளது முக்கியமான பள்ளி பேப்பர்களின்மீது round table pizza கடையில் இருந்து வரும் advertisement லிருந்து, dentist இடமிருந்து வரும் ஸ்டிக்கர்வரை fridge ல் ஒட்டி வைத்திருப்பேன். இப்போது அவையெல்லாம் ஓரங்கட்டப்பட்டு இந்த  emoticons தான் இருக்காங்க.

எப்போதாவது வீட்டிற்கு package வந்தால் உள்ளே உள்ள பொருள் எப்படி வந்திருக்குன்னு பார்க்கமாட்டேன். முதல் வேலையாக அதிலுள்ள bubble wrap ஐ  எடுத்து பபுள்ஸை எல்லாம் வெடித்துவிடுவேன். சிலசமயம் அடுத்த நாளுக்காக‌ சேமித்தும் வைப்பேன்.

இப்படியான என்னிடம் இவ்வளவு ஸ்டிக்கர்ஸ் உள்ள அட்டை வந்தால் சும்மா இருப்பேனா!!

அன்று இரவு மணி 8:30 ஆனது. மகளிடமிருந்து ஃபோன். அப்பார்ட்மென்ட் வாசலுக்கு விரைந்தேன். ஃபோன் வருவதற்கு முன்பே 8:25 க்கெல்லாம் ஃப்ரிட்ஜில் ஒட்டிய ஸ்டிக்கரை எல்லாம் மீண்டும் அதற்குரிய அட்டையிலேயே எடுத்துவந்து வைத்துவிட்டேன். மகளுடன் சேர்ந்து மீண்டும் பிரித்தெடுத்து ஒட்டுவதற்காக.

பள்ளியிலிருந்து அப்பார்ட்மென்ட் வாசல்வரை தனியாக வரும் அவள் உள்ளே வருவதற்கு மட்டும் நான் போய் அழைத்துவர வேண்டும். அவ்வளவு பயம்.

நானும்கூட சின்ன வயசுல அப்படித்தான் இருந்தேன். தோட்டம், தெரு என இரவு வரை ஒரு இடம்கூட‌ விடாமல் ஆட்டம் போடும் என்னால் பகலிலேயே வீட்டின் உள்ளே சென்று தண்ணீர் மொண்டு குடிக்க பயம். ஹி  ஹி, என்னை மாதிரியே மகளும் இருப்பதை நினைத்து பெருமைதான் எனக்கு !

சமயங்களில் எனக்குமே கொஞ்சம் பயம்தான். அப்பார்ட்மென்ட் வாசலில் இருந்து உள்ளே நடந்து வரும் வழி நெடுக ஆரஞ்சு கலந்த சிவப்பு நிற மின் விளக்குகள் தரையோடு தரையாக‌ இருந்தால் யாருக்குதான் பயம் வராது?

மகள் உள்ளே நுழைந்த‌துமே "ஹை,emoticons, வாம்மா ஃப்ரிட்ஜுல ஒட்டலாம்" என்று கிச்சனுக்குள் போனாள். சலிக்காமல் அதே வேலையை மீண்டும் செய்ய நானும் அவளைப் பின் தொடர்ந்தேன், "பாருங்க, பாப்பாவும் என்னை மாதிரியேதான் இருக்கிறாள்" என்று சொல்லிக்கொண்டே.

ஃப்ரிட்ஜில் ஒட்டிய இந்த ஸ்டிக்கர்ஸை எல்லாம் ஒரே இடத்தில் இருக்க விடமாட்டேன். அடிக்கடி ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இடம் மாற்றி வைத்துக்கொண்டே இருப்பேன். இன்று வலது மேல் கோடியில் இருக்கும் இவர்கள் அடுத்த நாளே இடது கீழ் கோடிக்கு இடம் பெயர்ந்திருப்பார்கள்.

ஒரு நாள் கூட்டாமாக இருப்பார்கள்,அடுத்த நாளே தனித்தனியாக்கப்படுவார்கள். இப்படியாக இவ்வளவு நாளும் ஃப்ரிட்ஜை ஆக்கிரமித்திருந்தவர்கள், சென்ற ஜூன் மாதம், முதல் வாரத்தில் இருந்து ஃப்ரிட்ஜில் இருந்து காணாமல் போய்விட்டனர்.

மகளுக்கு பள்ளி முடிந்த பிறகு, ஃப்ரிட்ஜில் இனி பேப்பர் ஒட்டி வைக்கும் வேலை இல்லாததால், எல்லாவற்றையும் எடுத்துவிட்டேன். பார்க்க ஃப்ரிட்ஜ் நீட்டா அழகாக‌ இருக்கவும், கொஞ்ச நாளைக்கு இப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டேன்.

இப்போது மீண்டும் இவர்களை தூசுதட்டி, ஃப்ரிட்ஜில் ஒட்டலாம் என பதிவு போட்ட அன்று மகளைக் கூப்பிட்டேன். அவள் "நீயே ஒட்டிடுமா" என்றாள்.

மகள் மாறிவிட்டாளோ !!!

மாறாமல் இருப்பது என்னைப் போன்ற, ஹி ஹி உங்களைப் போன்ற ஒருசிலர்தான் போல.

மழைபெய்து முடிந்த பிறகு உள்ள அந்த ஈரமன்ணில் கோடு கிழித்து ஸில்லு விளையாட, தாயம் & பல்லாங்குழி ஆட, ஊஞ்சல் ஆட, புதிர் விடுவிக்க, ஸ்கிப்பிங் விளையாட, ஓடிப்பிடித்து & கண்ணாமூச்சு ஆட, ........ இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.

நீங்களே சொல்லுங்க, இவையெல்லாம், இன்றும் உங்களுக்குப் பிடிக்கும்தானே !!

14 comments:

  1. நீங்களே சொல்லுங்க, இவையெல்லாம், இன்றும் உங்களுக்குப் பிடிக்கும்தானே !!-- Yessss! : D

    ReplyDelete
    Replies
    1. அதனாலதானோ என்னமோ, நாம எல்லோரும் எப்படியோ ஒன்றாக சேர்ந்திருக்கிறோம் !!

      Delete
  2. Replies
    1. வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மகிழ்ச்சிங்க.

      Delete
  3. ஒரே emotions , feelings நிறைந்த பதிவாகி விட்டதே! இன்னும் நம்மிடம் சில சின்ன சின்ன சந்தோஷங்கள் இருக்கத்ஹ்டான் இருக்கின்றன. வெளியே சொல்வதற்கு ஒரு மாதிரியாக இருப்பதால் மறைத்து விடுவோம். நீங்கள் எழுதி விட்டீர்கள்.
    எனக்கும் தாயம் விளையாடப் பிடிக்கும். பரமபதம், பாண்டி.....எல்லாமே
    மீண்டும் பள்ளிக்குப் போகலாம் தான்.......ஆசைப்படலாம்.

    ReplyDelete
    Replies
    1. "மீண்டும் பள்ளிக்குப் போகலாம் தான்"__________ அதிலும் எனக்கு அந்த உள்ளூரில் ஒன்னுமே தெரியாத நிலையில் ஆரம்பப்பள்ளிக்குப் போக வேண்டும்.

      சின்னசின்ன சந்தோஷங்கள் இருப்பதால்தான் எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாய் இருக்க முடிகிறது.ஹி ஹி இங்கும் பாண்டி ஆட புளியிலுள்ள & பேரீச்சையிலுள்ள கொட்டைகளும் எடுத்து வச்சிருக்கேன்.

      Delete
  4. //bubble wrap ஐ// ;))) இது எங்க ஸ்கூல் பசங்க பண்றது. அதுலயும் பெரிய பபுள்ஸ் ஃபேமஸ். இன்று தலையணை ஷேப்ல வரும் பாக்லாம் போட்டு வெடிச்சாங்க.
    //Glue இல்லாமல் மைதா பசை போட்டு ஒட்டியதால// அடுத்த தடவை எப்படி பிரிப்பீங்க? கட் & பேஸ்ட்! ;)
    //வலது மேல் கோடியில் இருக்கும் இவர்கள் அடுத்த நாளே இடது கீழ் கோடிக்கு இடம் பெயர்ந்திருப்பார்கள்.// இங்க ஃப்ரிட்ஜ் மாக்னட்டுக்கு இந்தக் கதி ஆகும். நாளுக்கேற்ற மாதிரி ஏதாவது ஒரு டிசைன் வருவது போல ஒட்டுவேன். இப்போ இல்லை.
    //இவையெல்லாம், இன்றும் உங்களுக்குப் பிடிக்கும்தானே !!// ம்ஹ்ம்! எப்பவும் தனிமை விரும்பி நான். சைக்கிளிங் பிடிக்கும். இப்போ வலையுலகம்தான் என்னைக் கூட்டத்தில் ஒருத்தியாக உலவ வைத்திருக்கிறது.
    ரசிக்க வைத்த இடுகை சித்ரா. சுப்பர்ப்.

    ReplyDelete
    Replies
    1. "இது எங்க ஸ்கூல் பசங்க பண்றது"________ அவ்வ்வ்!! பெரிய பேக் எல்லாம் வெடிக்கலாம்தான்.ஆனால் என்னமோ ஏதோவென கம்ப்ளெய்ன் பண்ணிட்டா? இருந்தாலும் எனக்கு பெரிய பேக் வெடிக்க பயம்தான்.

      மைதா பசை ஒட்டினேன்னு சும்மா சொன்னங்க.எல்லாமே 'மேக்னடிக் எமோடிகான்ஸ்'தான்.

      "நாளுக்கேற்ற மாதிரி ஏதாவது ஒரு டிசைன் வருவது போல ஒட்டுவேன். இப்போ இல்லை"____________ நீங்களும் கொஞ்ச நாள் முன்னால வரைக்கும் இப்படித்தானே இருந்தீங்க,கண்டுபிடிச்சுட்டேன் பாத்தீங்களா!!

      வலையுலகம் இருப்பதால் தனிமைக்கு டா டா.நல்லது.

      Delete
  5. எத்தனை வயதானாலும் நமக்குள்ளே ஒரு குழந்தை இருக்கும். அந்தக் குழந்தைத்தனமான விஷமங்கள், எண்ணங்கள் இன்றும் உங்களுடன் இருப்பது சந்தோஷமான விஷயம்.
    இவைதான் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும் விஷயங்கள்.
    மிகவும் மகிழ்ச்சியாக இந்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. "இவைதான் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும் விஷயங்கள்"_________ அழகா ஒரு வரியில சொல்லிட்டீங்க.நீங்க சொன்னது நூறு சதவீதத்திற்கும் மேல் உண்மைதாங்க. பாராட்டுகளுக்கு மகிழ்ச்சி.

      Delete
  6. எங்க வீட்டு ஃப்ரிட்ஜ்ல நாங்க ஊர் சுத்தினதின் அடையாளங்கள்தான் நிறைஞ்சிருக்கு. போகும் இடங்களிலெல்லாம் ஒரு சின்ன மேக்னட் வாங்கிவந்துருவோம். இப்ப ப்ரீஸர் டோர்ல இனி இடமில்லை. ;)

    பப்புள்ராப் எனக்கும் புடிக்குமே! :)) ஊர்ல இருந்து தாயக்கரம் வாங்கிவந்தேன், ஆனா இங்க கம்பெனிதான் இல்லை! தனியா தாயம் விளையாடற அளவுக்கு இன்னும் போகலை நானு..வீட்டுக்கு வரும் குட்டிப் பசங்க விளையாடிட்டு இருக்காங்க. :)

    ReplyDelete
    Replies
    1. தனியா எப்படி விளையாட முடியும்!மகள் இருப்பதால் தப்பித்தேன்.பாவம் அம்மான்னு வேறு வழியில்லாம விளையாடுவா.அதுகூட விளையாடி இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது.எல்லா கேம்சும் கராஜ்ல இருக்கு.

      மகள் மிடில்ஸ்கூல் ப‌டிக்கும்போது ஒரு ஃப்ரெண்ட் இருந்தாங்க.நிறைய விஷயங்களில் ரெண்டு பேரும் ஒத்துபோவோம்.பசங்க வர்றாங்களோ இல்லையோ நாங்க ரெண்டு பேரும் பார்க்குக்கு போய் ஊஞ்ச‌லில் உட்காராமல் வரமாட்டோம்.சிலசமயம் மட்டும் இப்படி அமைந்துவிடுகிறது.

      Delete
  7. எப்போதாவது வீட்டிற்கு package வந்தால் உள்ளே உள்ள பொருள் எப்படி வந்திருக்குன்னு பார்க்கமாட்டேன். முதல் வேலையாக அதிலுள்ள bubble wrap ஐ எடுத்து பபுள்ஸை எல்லாம் வெடித்துவிடுவேன். சிலசமயம் அடுத்த நாளுக்காக‌ சேமித்தும் வைப்பேன்.

    நானும் ..வீட்டில் எல்லோரும் சிரிப்பார்கள்..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நீங்களும் என்னை மாதிரிதானா ! வருகைக்கு நன்றிங்க.

      Delete